இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கண்டறிந்து, ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்வர் கீழ்க்காணும் நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.




(பள்ளி மாணவர்கள் - மாதிரிப்படம்)


கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூபாய் 5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகையை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கிட வேண்டும்.


பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.




(மாதிரிப்படம்)


ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனாவால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.


மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றம் வளர்ச்சி ஆகியவை கண்காணிக்கப்படும். அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழகத்தில் தினசரி கொரோனாவால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், நேற்று மட்டும் கொரோனாவால் மாநிலம் முழுவதும் 486 நபர்கள் பலியாகி உள்ளனர். பல இடங்களில் பெற்றோர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழலில், அவர்களின் எதிர்கால நலனுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவந்த சூழலில், தமிழக அரசு அவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.