தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமில்லாமல் தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும். திருப்பூரை தனிமாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி என திருப்பூர் மண்டல மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். 






தொடர்ந்து பேசிய அவர், “ பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது. அதற்கு நாம் தோள் கொடுக்க வேண்டும். தொழில்கள் சென்னையை சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்” என்று தெரிவித்தார். 


முழுவிவரம் : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2022) தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' திருப்பூர் மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 167,58 கோடி ரூபாய் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பித்தார்.


குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதார சமூக-பொருளாதார மற்றும் மூலங்களை வழங்கி ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், திருப்பூரில் நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு திருப்பூர் மண்டல மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS)


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ரூ,40 இலட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், ரூ.40 இலட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும், ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது.


இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, பொதுவாக வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால். கடன் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் நேரம் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


தாய்கோ வங்கியிலிருந்து கடன் பெறவிருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் "தரமதிப்பீடு" (Credit score) நிறுவனங்களின் 'கடந்த கால கடனை திருப்பி செலுத்திய காரணி (CIBIL score)' மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளையும் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தரமதிப்பீடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள். வங்கிகள் / நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற பேருதவியாக அமையும்.


மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கென தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து. இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக. கடன் உத்தரவாதத்துடன் 1.19 கோடி ரூபாய்க்கான கடன் தொகையினை, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட பிற பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இன்றைய தினமே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவார்கள்.


 முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : 


இம்மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் இணைய வர்த்தக தளங்களின் வாயிலாக புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு வழிகாட்டிடும் வகையில், FaMe-TN நிறுவனம் மற்றும் Open Network for Digital Commerse (ONDC) நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும்;


FaMe-TN நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்குட்பட்டு இருக்கும் வகையில், வழிகாட்டுதல் பெற Institute of Chartered Accountants India (ICAI) நிறுவனத்துடனும், of சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியாக அமைந்திட World Resource institute (WRI) நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


இத்திட்டங்கள் அனைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையரகத்தின் வாயிலாக  செயல்படுத்தப்படும்.