சென்னை காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, 4-வது தளத்தில் உள்ள அறை எண் 435-க்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 


அமலாக்கத்துறை சோதனை:


அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. அப்போது, அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மற்றும் ஈரோட்டில் உள்ள இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.  17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


அதன் பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர்களும் முதலமைச்சரும் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர். அமைச்சர் கைது செய்யப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானதும், கரூர் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் பாஜகவினர் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது. 


அறுவை சிகிச்சை:


இதற்கிடையில், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு ரத்த நாளத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை மருத்துவர் பரிந்துரைத்தார். அதன் பின்னர்  மருத்துவமனைக்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதினை உறுதி செய்தார். மேலும், அவரை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.


இதன் பின்னர், நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், மனு அளிப்பட்டது, இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை 8 நாட்கள் மட்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததுடன், அவரது சிகிச்சைக்கு தொந்தரவு தரக்கூடாது என அறிவுருத்தியது. இதற்கிடையில், புழல் சிறையில் அமைச்சருக்கு 1440 என்ற கைதி எண் வழங்கப்பட்டது. 


தனி அறைக்கு மாற்றம்:


அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் கோரிக்கையின் பேரில், அரசு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அங்கு மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


கடந்த 21ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 10 மணிவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தொடர் கண்காணிப்பில் இருந்த அமைச்சர், தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போதுவரை அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர் முத்துச்சாமிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார்.