திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 13 ஆம் நூற்றாண்டு மூன்றாம் இராஜராஜன் காலத்து (பொ.ஆ. 1232) கல்வெட்டு ஒன்றில் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவ நாயனார் மாத்தூர் என்கிற ஊரில் தனது பெயரில் மெய்கண்டடீஸ்வரமுடைய நாயனார் கோயிலும் மெய்கண்ட தேவ புத்தேரி என்ற ஏரியை வெட்டுவித்ததையும் குறிப்பிடுகிறது. மேற்படி கல்வெட்டில் குறிப்பிடும் மெய்கண்டீஸ்வர முடைய நாயனார் திருக்கோயில் மற்றும் ஏரியைக் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த த.ம.பிரகாஷ், ச.பாலமுருகன், மதன்மோகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா கிராம உதவியாளர் ஜெகந்நாதன் ஆகியோர் கூட்டாக திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தென்மாத்தூர் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

  


 




 


இந்த ஆய்வு குறித்து ABP Nadu-வில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகனிடம் பேசுகையில், திருவண்ணாமலை கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மெய்கண்டிஸ்வர முடைய நாயனார் என்பவர் சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான சிவனஞான போதம் என்ற நூலின் ஆசிரியர் ஆவார். அவர் இவ்வூரில் எடுப்பித்த சிவன் கோயில் குறித்து விசாரித்த போது, அவ்வாறு தற்போது அப்பெயரில் கோயில் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த ஊரில் சோழர்காலத்து சிவலிங்கம், நந்தி, கோயில் கல்தூண்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளன எனத் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த கல்பலகைகள், சிவலிங்கம், நந்தி ஆகியவற்றின் சிற்ப அமைப்பு பிற்கால சேழார் காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதாலும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு கூறும் காலத்துடன் பொருந்தி போவதாலும் இது மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோயிலை அப்புறப்படுத்தி பள்ளிக்கூடம் கட்டிவிட்டதால் மற்ற விவரங்கள் அறியப்படவில்லை. மேலும் இந்த ஆய்வுக்கு வலு சேர்ப்பதாக அவ்வூரின் மேற்கு பகுதியில் மரத்தடியில் ஒரு 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஒரு அடியாரின் சிற்பம் திருவண்ணாமலையை நோக்கி காணப்படுகிறது. இந்த சிற்பம் குறித்த கல்வெட்டுகள் ஏதும் இல்லை என்றாலும்,


 


 




 


இதன் தோற்றம் அடியார் போல் உள்ளதாலும் இதன் சிற்ப அமைதியும், பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதாலும் இவர் ஒருவேலை மெய்கண்ட நாயனாராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று அறியப்படுகிறது. மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் மெய்கண்ட தேவநாயனார் தன் பெயரில் மெய்கண்ட தேவப்புத்தேதி என்ற ஏரியை வெட்டி வைத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ததில் அவ்வூரில் பெரிய ஏரி மற்றும் சித்தேரி என இரண்டு உள்ளன. அதில் பெரிய ஏரியில் வடபுறமுள்ள இரண்டு தூண்களில் ஒரு பக்கம் நந்தியின் கோட்டு உருவமும் மற்றொன்றில் திரிசூலமும் உள்ளது. இது மெய்கண்டார் விரிவு படுத்திய ஏரியாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய ஏரியின் தென்கோடியில் உள்ள தூணில் ஒரு அரைவட்ட கல்லில் எட்டாம் நூற்றாண்டு பல்லவர் கால மன்னன் நந்தி வர்மனின் 10 ஆண்டு ஆட்சி (பொ.ஆ. 785) கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டைப் படித்ததில் இக்கல்வெட்டு 10 வரிகளில் அமைந்துள்ளது. இது பல்லவமன்னன் நந்தி வர்மனின் 10 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் வேம்பன் குணவனான கிரணூர் கங்கன் தாழி வீராலை என்பவர் செய்வித்ததாக குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நந்திவர்மனின் சீயமங்கலம் தூம்பு கல்வெட்டுக்கு பிறகு தென்மாத்தூர் தூம்புக் கல்வெட்டு தற்போது கண்டெடுக்கப்பட்டது. இது பல்லவர்கள் இப்பகுதியில் நீர்மேலாண்மைக்கு கொடுத்த முக்கியத்துவம் இதன் மூலம் தெரியவருகிறது.  


 




மேலும் தென்மாத்தூரின் மேற்குப்பகுதியில் உள்ள பாறையில் குடை மற்றும் பாதம் கோட்டு உருவத்துடன் பிற்கால சோழர்காலத்தைச் சேர்ந்த 4 வரி கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அதில் அழியா விரதங் கொண்ட நல்லூர் என்று மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. அழியா விரதங் கொண்ட நல்லூர் என்பது தற்போதைய தென்மாத்தூர் கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்த கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென்மாத்தூர் கிராமத்தில் கிடைக்கக்கூடிய நந்தி, சிவலிங்கம், கோயில் கட்டுமான கற்தூண்கள், ஏரித்தூம்பு ஆகிய தடயங்கள் திருவண்ணாமலை கல்வெட்டில் குறிப்பிடும் திருவெண்ணைநல்லூர் மெய்கண்ட தேவர் ஏற்படுத்தியதாக கருத இடமளிக்கிறது.


மேலும் அவ்வூரில் கிடைக்கப்பெற்ற அடியார் சிற்பம் மெய்கண்ட தேவராக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். அழியா விரதம் கொண்ட நல்லூர் என்ற கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கது. தென்மாத்தூர் கிராமத்தில் இவ்வளவு சிறப்பான வரலாற்று தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இதை அரசும் ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என்றும் கிராம மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோருகின்றனர்.