அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து  திமுக செய்துள்ள முறையீடு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி கைது தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என திமுக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதி மீறல்கள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் முறையீடு செய்யப்படுகிறது.  செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் இது ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ இந்த வழக்கில் ஆஜராக உள்ளார். 


தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் கைதை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.


அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி - அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். 


இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது.


விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.


எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்”. இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.