நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வரவுள்ளதாக் கூறப்படுகிறது. 


கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி:


அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


நள்ளிரவு வரை கிட்டதட்ட 17 மணி நேரமாக அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 


மருத்துவமனையில் அனுமதி:


செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை, காது அருகே காயம் போன்று இருப்பதாகவும் மருத்துவமனையில் அவரை பார்க்கச் சென்ற அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர் பாபு, பொன்முடி, ரகுபதி, அன்பில் மகேஸ், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.


அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து 9 மணியளவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என சொல்லப்படுகிறது.


டெல்லி அழைத்து செல்லப்படுவாரா?


இந்நிலையில் செந்தில்பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இது உறுதியானால் அவரை டெல்லிக்கு கொண்டு  அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.