கரூரில் வருகின்ற இரண்டாம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் வருகையை ஒட்டி அனைத்து துறை அலுவலர்கள், திட்டப்பணிகள் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 




இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது, பயனாளி அனைவரையும் பாதுகாப்பாக வரவழைத்து, பாதுகாப்பாக அழைத்துச் செல்வது அனைத்து துறை அலுவலர்களின் கடமையாகும். 


 




ஜூன் 1ஆம் தேதி இரவே கரூருக்கு முதலமைச்சர் வந்து விடுவார். மறுநாள் காலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நாமக்கல் செல்கிறார். கரூர் மாவட்டத்தில் முதல்வர் வருகையையொட்டி பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் கட்டக்கூடாது. தொடரும் பட்சத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.


 




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, “தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை எடுத்து பின்னர் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 2-ஆம் தேதி வர உள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எழுபத்தி ஆறாயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 76 ஆயிரம் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


 




கடலில் காற்றாலை எப்படி பதிய வைக்கப்பட்டுள்ளன, அதற்கான திட்ட செலவுகள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை. தமிழகத்தில் கடலில் காற்றாலை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து களத்திற்கு சென்று ஆய்வுகளை செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்த பணிகள் மேற்கொள்வதற்கு காலங்கள் உள்ளது. திட்ட மதிப்பீடுகளும் கூடுதலான செலவினங்களும் ஏற்படும். ஏனென்றால் தரையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் உள்ளே சென்று தான் அந்தத் திட்டம் இறுதி வடிவம் பெறும்.




கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய காலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது” என்று கூறினார்.





திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு கால நிறைவு பெற்ற நிலையில் முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்க கரூர் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவையில் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை ஒட்டி திமுக பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும், பயணிகளும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


 




சாதாரண நிகழ்வு என்றாலே மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, இயக்குனர் சங்கர் திரைப்படம் போல பிரம்மாண்டம் காட்டுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் முறையாக கரூர் வருகையை ஒட்டி எவ்வாறு பிரம்மாண்டம் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண