சேலம் பிரசித்திபெற்ற அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் தங்கத் தேரோட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்க தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழக முதல்வரின் நல்லாட்சியில் கோவில் திருப்பணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகங்கள் நடைபெறாமல் இருந்த கோவில்களில் குடமுழுக்குகள் செய்துவிடவும், ஆண்டு கணக்கில் பராமரிப்பு காரணமாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் பக்தர்கள் நேர்த்திக்கடனுகாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கும்பாபிஷேகம்:


மேலும் கோவில் திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள் மற்றும் கோவில் குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருப்பணி கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பலவித தடங்கல் காரணமாக குடமுழுக்கு தள்ளிப்போனது. தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பலகட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு திருப்பணிகளை வேகப்படுத்தி பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் சேலம் மாவட்டத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று உள்ளது" என்றும் பேசினார்.



முதல்வரே காரணம்:


தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்ற பிறகு 1118 திருக்கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தேறி உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் 1993 ஆம் ஆண்டு ராஜகோபுரம் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்த கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு எந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது என்பதற்கான வரலாறு, சான்று கிடையாது. இவ்வாறு திருப்பணிகள் நடைபெறாத திருக்கோவிலில் பணிகள் நடத்தி முடித்து குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து வழக்கு நீதிமன்றம் வரைக்கும் சென்ற நிலையில் நேர்த்தியுடன் முடித்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றால் தமிழக முதல்வரின் உந்து சக்தி தான் காரணம். மற்றும் திருக்கோவில் தங்கத்தேர் இதுவரை திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு முதல் திருத்தேர் பவனி வரவில்லை.


கோவில் நிலம் மீட்பு:


இந்த நிலையில் உபயதாரர்கள் நிதியுடன், மூன்று லட்சத்து நான்காயிரம் திருப்பணிகளை நிறைவு பெற்று பொதுமக்களின் நேர்த்திகடனுக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பணியை பொறுத்தவரை 21 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நான்கு கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்களுடன், இந்து அறநிலைத்துறையின் பொதுநிலை இருந்து செலவு செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது என்றும் கூறினார்.


திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து கோவில் நிலங்களின் சொத்து மதிப்பு 5428 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைத்துறை சார்பில் இருக்கின்ற 67 தங்கத்தேர் மற்றும் 57 வெள்ளித்தேர் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் ராமேஸ்வரம், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட திருக்கோவில்களில் தங்கத்தேர்கள், வெள்ளித்தேர்கள் ஓடாமல் இருந்ததை திமுக ஆட்சி வந்தவுடன் தான் பக்தர்கள் நேர்த்திக்கடனிற்கு அர்ப்பணித்து உள்ளோம் என்றும் கூறினார்.


நங்கநல்லூர் ஆஞ்சநேயர்கோவில், புரசைவாக்கம் கங்காஈஸ்வரர் கோவில், பவானியம்மன் திருக்கோவில் ஆகிய 3 கோவில்களுக்கு தங்கத்தேர் உள்ளிட்டவைகள் தயார் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சியில், இந்து அறநிலைத்துறை பொறுத்தவரை தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் திருப்பணிகள், திருக்கோவில்களின் திருத்தேர்களில் மரமாற்றம் மற்றும் புதிய திருத்தேர்கள் உள்ளது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் 71 திருத்தேர்கள், மரத்தேர்கள் ஆகியவை 58 கோடி மதிப்பீட்டில் புதிதாக செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று 18 திருத்தேர்களில் மரமாற்று பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தகவல் தெரிவித்தார்.


திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறுகின்ற திருப்பணிகள் என்பது இந்து அறநிலையத்துறை வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சி ஏற்ற பிறகு திருப்பணிகள் குறித்து வசை பாடிய, அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பக்தர்கள், இறையன்பர்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர் எனவும் பேசினார்.



திருப்பணிகள்:


சேலம் கோட்டை மாரியம்மன் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கியது குறித்த கேள்விக்கு, தமிழக முதல்வர் எல்லோருக்கும், எல்லோரும், எம்மதமும் சம்மதம் என்ற படியே ஆட்சி நடத்துவதற்கு இதுவே சாட்சி. அனைவரும் அவரவர் மத பயன்பாடுகளிலும், சுதந்திரமாக மதவழிபாடு செய்ய தமிழக முதல்வரின் ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவிலில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே மேளங்கள் அனுமதிக்கப்படவில்லை.


சாதக, பாதங்கள் ஆய்வு செய்தபிறகு மேளங்கள் அனுமதிப்பது குறித்து வழிவகை மேற்கொள்ளலாம் என்றார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் சிறுகோவில்களுக்கு மாநிலளவில் தொல்லியல் துறை அனுமதி என்பது சுமார் 7036 கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் 1200 கோயிலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்பட்ட 736 திருக்கோவில்களில் 3000க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள நான்காயிரம் திருக்கோவில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


அண்ணாமலை பதவியில் இருப்பாரா?


திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 450 கோடி அரசிடமிருந்து மானியமாக இந்து அறநிலைத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களுக்கு 200 கோடியை தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கி உள்ளார். இவ்வாறு கணக்கிட்டுப் பார்த்தால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 450 கோடி ரூபாய் அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரியதொகை இரண்டரை கால ஆண்டு ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆட்சி செய்த காலத்தில் மானியமாக இவ்வளவு பெரிய தொகையை வழங்கவில்லை என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.


திருப்பணிகள் சிறுகோவில்கள், பெரியகோவில்கள் என பாராமல் அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு ஏதாவது கோவில்கள் திருப்பணிகள் நடைபெறாமல் இருப்பதாக பட்டியல் கொடுத்தால் உடனடியாக பணிகளை விரைந்து மேற்கொள்ள இந்த ஆட்சி தயாராக உள்ளது என்றும் உறுதிப்பட தெரிவித்தார். அண்ணாமலை ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலைத்துறை இருக்காது என்று பேசியது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த பதவியில் இருப்பாரா? என்று பார்ப்போம்; அதன்பிறகு இந்து அறநிலைத்துறை பற்றி அவர் பேச வரட்டும் என்றும் கிண்டலடித்தார். இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு நடவடிக்கைகள், திருப்பணிகள் தொடர் நடவடிக்கையாக இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார். திமுக ஆட்சி வந்தபிறகு இந்து அறநிலையத்துறை உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது என்றும் தகவல் தெரிவித்தார்.