‛177 ஏக்கர் நிலத்தை கிஷ்கிந்தா தீம் பார்க் ஆக்கிமித்திருப்பதாகவும்... அதை சட்டப்போராட்டம் நடத்தி மீட்டோம்...’ என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று காலை பேட்டியளித்திருந்தார். ஊரெல்லாம் பிரபலமாக தீம் பார்க் மீது இப்படி ஒரு புகார் வந்தால் எப்படி... ஊரே கிஷ்கிந்தாவை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இந்து சமய அறநிலையத்துறை ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அமைச்சர் சேகர் பாபு கூறிய அதே கருத்துக்கள் தான். ஆனால் ஒரு பெரிய மாற்றம்... இருந்தது. அமைச்சர் குறிப்பிட்ட கிஷ்கிந்தா தீம் பார்க்கிற்கு பதிலாக, குயின்ஸ் லாண்ட் தீம் பார்க் பெயர் இருந்தது. 


மாப்பிள்ளை அவர் தான்... அவர் போட்டிருந்த சட்டை வேறு ஒருவருடையது என்பதைத் போல், மேட்டர் அது தான், பெயர் மட்டும் வேறு என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. போகிற போக்கில் அமைச்சர் கிஷ்கிந்தா பெயரைக் கூற, அனைத்து ஊடகங்களும் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன் விளைவு அனைவர் வாயிலும் கிஷ்கிந்தா பெயர் தான். இப்போது அதை குயின்ஸ் லாண்ட்டாக மாற்ற வேண்டிய கட்டாயம். முந்திக் கொடுத்த பேட்டி, இப்படி ஆகிவிட்டதே. சரி பெயர் மாறியது போல ,நடவடிக்கை மாறிவிடப்போகிறது. முன்பு கூறிய படி சட்டப்போராட்டம் நடத்தி, சம்மந்தப்பட்ட கோயில் நிலத்தை மீட்க அறநிலையத்துறை முன்வர வேண்டும்.




இதோ அறநிலையத்துறை அளித்த விரிவான தெளிவான அறிக்கை...


குயின்லாண்ட் பூங்கா நிலம் சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்
 
 
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (23.09.2021) சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தின் பின்பு மாண்புமிகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறையின்  சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  திருக்கோயில்களில் மொட்டைக்கு அடிப்பதற்கு இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொட்டை அடிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகை ரூ.5000/- வழங்கப்படும்.


இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். திருக்கோயில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் சென்னை மண்டலத்திற்கு மாண்பமை நீதியரசர் திரு.ராஜீ, மதுரை மண்டலத்திற்கு மாண்பமை நீதிபதி செல்வி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்திற்கு மாண்பமை நீதியரசர் திரு. ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.


மேலும், சென்னை லயோலா கல்லூரி இடம் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் இல்லை. குயின்லாண்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், அருள்மிகு காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கேயிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தை சார்ந்த உதயகிரி சாமைய்ய ஜமின்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர் திருக்கோயிலின் பூஜை மற்றும் பராமரிப்பு பணியை தொடர்ந்து நடத்துவதற்கு சொத்துக்களை உயில் சாசன ஆவணம் எழுதி பதிவு செய்துள்ளார். அதன்பின்பு பல்வேறு காரணங்களால் சில நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளன. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன்மீது இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?