விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.


அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு


விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம்


இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.


நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத அமைச்சர் பொன்முடி


இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன்  ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனு மீதான விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். 


இறுதி கட்டத்தை எட்டிய செம்மண் குவாரி வழக்கு


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அமைச்சர் பொன்மொழி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இருப்பினும் அரசு தரப்பு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.