காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காலண்டர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி (61). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கஸ்தூரி காவல் ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற கஸ்தூரி கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து, வட்டிக்கு விடுவது, சீட்டு நடத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். 





வீட்டில் துர்நாற்றம்...


கஸ்தூரியின் மகன் தற்பொழுது டேராடூன் பகுதியில் தங்கி வேலைக்கு பார்த்து வருகிறார். இதனால் கஸ்தூரி காஞ்சிபுரத்தில், தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கஸ்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தங்கியிருந்த வீட்டில், துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக, இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது  கஸ்தூரி சடலமாக இருந்துள்ளார். 





மர்ம மரணம்...


உடனடியாக சடலத்தை மீட்க போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக போலீசார் இச்சம்பவம் குறித்து, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடலில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காயம் இருந்தது விசாரணையில்  தெரியவந்துள்ளது. 



காவல்துறைக்கு சந்தேகம்...


மருத்துவர்களிடம் இந்த தகவல்களை உறுதிப்படுத்திய காவல்துறையினர் உயிரிழந்த கஸ்தூரியின், தொலைபேசியை கைப்பற்றி விசாரணையை துவங்கினர். காவல்துறை நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட நபர்களிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் கஸ்தூரி பேசியதும் , காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. மேலும் அவர் வீட்டு அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளையும், கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கஸ்தூரியின் மகன் இதுகுறித்து புகார் அளிக்கவே , போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். 





மதிமுக மாவட்ட செயலாளருக்கு தொடர்பா ?


மறுபுறம் கஸ்தூரியின் ஈமச்சடங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்தேறின. தற்பொழுது கஸ்தூரி வசித்து வரும் வீடு மதிப்பு, சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வீட்டை விற்கும் முயற்சியில் கஸ்தூரி ஈடுபட்டு வந்ததாகவும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையை கஸ்தூரியின் 10 ஆண்டுகால நண்பராக இருக்கக்கூடிய, மதிமுகவின் மாவட்ட செயலாளர் வளையாபதி காவல்துறையினரால், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





மதிமுக மாவட்ட செயலாளர் கைது...


கைது செய்யப்பட்டுள்ள வளையாபதி, ரியல் எஸ்டேட், வீடுகள் விற்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரி இறுதிச் சடங்கின் பொழுதும், வளையாபதி முன் நின்று அனைத்து  வேலைகளையும் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள வளையாபதியிடம், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.‌


காவல்துறை நடத்திய விசாரணையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு வளையாபதி மற்றும் பிரபு ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய , பிரபுவை தேடி வருகின்றனர். பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில், மதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.