தமிழ்நாட்டில் ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் விற்கப்படும் என்றும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 


தக்காளி விலை உயர்வு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “தக்காளி விலை சமீபகாலமாக உயர்ந்து கொண்டு சென்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் 67 பண்ணை பசுமை கடைகள் 111 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, அது 300 நியாய விலை கடைகளாக அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்ததாக தெரிவித்தார்


பிற மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்த பதிலும் அங்குள்ள மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தக்காளியை பொறுத்தவரை உற்பத்தி குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக உள்ளதுமே விலை உயர்வுக்கு காரணம் வணிகர்கள் எங்கும் பதுக்கல் நடைபெறவில்லை எனவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தவில்லை” என தெரிவித்தார்


தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழக முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில்  தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படும்.மாவட்டம் தோறும் 10 நியாய விலைக் கடைகள் என சராசரியாக ஒரு கடைகளில் 50 கிலோ தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறை, உணவு துறை அதிகாரிகளுடன் விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என தெரிவித்தார்.


தக்காளி விலை உயர்ந்தாலும் ரூ. 60க்கே விற்கப்படும்: 


வெளிச்சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 180 வரை உயர்ந்தாலும் அரசு சார்பில் கிலோ ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். விளைச்சல் குறைந்ததன் காரணமாகவே ஏற்பட்ட இயற்கையான விலையேற்றமே தவிர செயற்கையான விலையேற்றம் இல்லை. மக்களின் மீது சுமை சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலை தக்காளி விற்பனை செய்யப்படும்.