கன்னியாகுமரியில் தேர் வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தியை, அமைச்சர் மனோ தங்கராஜ் சரமாரியாக விமர்சித்துள்ளார். 


கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமார சுவாமி  கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேர் திருவிழா கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தை அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த குமார சுவாமி கோவில் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வந்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.














இதனால் அங்கு எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். கடவுள் நம்பிக்கை இல்லாத மாற்று மதச் சிந்தனைகொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை இழுக்கக்கூடாது என பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர். இது ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பாஜகவினருக்கு இடையே தள்ளுமுள்ளாக மாறியது. இதனையடுத்து  பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உட்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்தார். 


இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.காந்தி, குங்குமம், திருநீறு பூசாதவர்களை கோயில்களில் ஏன் வடம் இழுக்க வைக்கிறார்கள்? என அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் கிறிஸ்தவ அமைச்சர் வரக்கூடாது என பக்தர்கள் எதிர்த்ததால்தான் நாங்களும் இணைந்து போராடினோம் எனவும் தெரிவித்திருந்தார். 




இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?. 1996 ஆம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோவில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன்.


குமரி மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் கோவில்களில் ₹50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா? பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்.மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.


மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மிகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர். பாஜகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்