மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (16 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 19 -ஆம் தேதி சனிக்கிழமை ஈடு செய்யும் வகையில் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான  கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். 


கடைமுக தீர்த்தவாரி உற்சவ விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த ஆண்டு நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும். வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடைமுக தீர்த்தவாரி உற்சவ வரலாறு 


மயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கி கொண்டதாக ஆன்மீக புராணங்கள் கூறுகின்றன.


எனவே ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை (16 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 19 -ஆம் தேதி சனிக்கிழமை ஈடு செய்யும் வகையில் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் அதிக மழைப் பொழிவு மயிலாடுதுறை மாவட்டத்தில் பொழிந்தது குறிப்பிடத்தக்கது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், ஐப்பசி மாத கடை முக தீர்த்த வாரி உற்சவத்தை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. இதனால் முன்னேற்பாடாக மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.