மயிலாடுதுறை: உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணமாகக் கோடைகால வெப்ப அலையின் (Heatwave) தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் கோடை காலத்தில் பதிவாகும் மிக அதிகப்படியான வெப்பநிலை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்திலிருந்து மனிதர்களைக் காப்பதற்காக ஜப்பான் நாடு ஒரு விசித்திரமான மற்றும் அதிநவீன கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் 'மனிதர்களுக்கான பிரிட்ஜ்' (Human Refrigerator) தொழில்நுட்பமாகும்.

Continues below advertisement

வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தின் மறுவடிவம்

ஜப்பான் நாட்டில் தெருவுக்குத் தெரு அமைக்கப்பட்டிருக்கும் குளிர்பான 'வெண்டிங் மெஷின்' (Vending Machine) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் ஒரு மனிதன் சௌகரியமாக உட்காரும் அளவிலான பெட்டி (Pod) போன்று இது காட்சியளிக்கிறது. இந்தச் சாதனத்தின் உட்புற வெப்பநிலை எப்போதும் மாறாமல் 15 டிகிரி செல்சியஸ் (59 டிகிரி ஃபாரன்ஹீட்) என்ற அளவிலேயே பராமரிக்கப்படும் வகையில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

5 நிமிடங்களில் நிவாரணம், 10 நிமிடங்களில் இயல்புநிலை

வெப்பத்தால் அவதியுறும் ஒரு தனிநபர் இந்த சாதனத்தின் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்த அடுத்த நொடியே இதன் குளிரூட்டும் செயல்பாடு தொடங்குகிறது. பெட்டியின் உட்புறத்தில் இருந்து சரியாக 5 டிகிரி செல்சியஸ் (41 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவிலான வீரியமிக்க குளிர்ந்த காற்று நேரடியாக மனிதரின் தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் சீராக வீசப்படுகிறது.

Continues below advertisement

இதன் மூலம், வெயிலில் அலந்து களைத்துப் போய் வருபவர்களுக்கு வெறும் 5 நிமிடங்களில் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும், உடலின் உள் வெப்பநிலையைக் கணக்கிட்டு, வெறும் 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்பநிலையை முழுமையான இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது.

தானியங்கி பாதுகாப்பு & மின்சாரச் சிக்கனம்

மனித உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்து மரத்துப்போவதைத் (Hypothermia) தடுப்பதற்காக இதில் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருவர் உள்ளே அமர்ந்து 20 நிமிடங்கள் நிறைவடைந்தவுடன், இந்த மெஷின் தானாகவே தனது குளிரூட்டும் இயக்கத்தை நிறுத்திவிடும் (Auto Shut-off). இதன் மூலம் நபரின் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதாரண ஏ.சி. (Air Conditioner) இயந்திரங்களை விட இது பாதியளவு (50%) மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துவது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

விலை மற்றும் தற்போதைய பயன்பாடு

தற்போது ஜப்பான் நாட்டில் உள்ள நகராட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள ஓய்வறைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இவை முதற்கட்டமாக நிறுவப்பட்டு வருகின்றன. இந்த அதிநவீன 'மனித பிரிட்ஜ்' சாதனத்தின் விலை ஜப்பானிய மதிப்பில் சுமார் 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது உலக நாடுகளின் வர்த்தகச் சந்தைக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார செலவு குறைவு என்றாலும், ஒரு ஏசி அறைக்குள் பலர் அமர்ந்து வெப்பத்தை தணிக்கும் நிலையில், ஏசிகளை விட பன்மடங்கு விலை உயர்வாக உள்ள இந்த தனிநபர் குளிர்சாதன பெட்டி பட்ஜெட்டில் செலவு செய்யும் நாடுகளுக்கு இது பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.