தூத்துக்குடியில் காவல்துறையினர் தாக்கியதில் விசாரணைக் கைதி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால்,  சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட  தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது  அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மது வியாபாரமா? மது வணிகம் செய்ததாக கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில்  காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி  வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில்தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சிபிஐ  விசாரணைக்கு ஆணையிடுக

ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைது மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ  விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.