மயிலாடுதுறை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் சின்னத்தின் தாக்கத்தினால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையும், அதனுடன் சேர்ந்து வீசி வரும் சராசரிக்கும் அதிகமான வேகத்திலான காற்றும் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்த மழை பழை மற்றும் ஓலை குடிசை வீடுகளின் உறுதித்தன்மையைச் சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள கீழ பட்டமங்கலம் ஊராட்சி, வடக்கு தெருவில், கனமழையின் தீவிரத்தையும், குடியிருப்புப் பகுதிகளின் பாதுகாப்பற்ற நிலையையும் பறைசாற்றும் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

Continues below advertisement


இரண்டு வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து விபத்து 


மயிலாடுதுறை கீழ பட்டமங்கலம் ஊராட்சி, வடக்கு தெருவில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவருடைய வீடு, கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் மிகுந்த சேதமடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டிட்வா புயல் சின்னத்தின் காரணமாகப் பெய்த கனமழையின் தொடர்ச்சியாக, எதிர்பாராத விதமாகப் பொன்னுசாமியின் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.


இடிந்து விழுந்த அந்தப் பலமான சுவர், அதன் அருகிலேயே இருந்த வரதராஜன் என்பவரது குடிசை வீட்டின் மீது நேராக விழுந்தது. இந்தத் திடீர் இடிபாட்டால், வரதராஜன் வீட்டின் சுவரும் உடனடியாக இடிந்து பலத்த சேதமடைந்தது. இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.


சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண்  படுகாயம்


சம்பவம் நடந்த நேரத்தில், வரதராஜனின் மனைவி காந்திமதி (வயது 55) என்பவர், இடிந்து விழுந்த வீட்டின் சுவரின் அருகே அமர்ந்துள்ளார். பொன்னுசாமியின் வீட்டின் சுவர் இடிந்து, அதைத் தொடர்ந்து வரதராஜனின் வீட்டின் சுவரும் இடிந்த வேகத்தில், சுவரின் கற்களும், மண் குவியலும் நேராகக் காந்திமதியின் மீது விழுந்துள்ளது.


சற்றும் எதிர்பாராத இந்த விபத்தில், காந்திமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவரை, சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மழையையும் பொருட்படுத்தாமல், அக்கம் பக்கத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் துரிதமாகச் செயல்பட்டு, காந்திமதியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


விபத்தில் படுகாயமடைந்த காந்திமதியை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்றபோதிலும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


“கடந்த இரண்டு நாட்களாகக் நிற்காமல் பெய்த மழையால், சுவரின் உறுதித்தன்மை முற்றிலும் குறைந்திருந்தது. இடிந்து விழுந்த சுவர் மிகவும் பழமையானது. எங்களைச் சுற்றியுள்ள குடிசைகள் மிகவும் பலவீனமாக உள்ளன. மழை நிற்கும் வரை நாங்கள் அச்சத்திலேயே வாழ வேண்டியுள்ளது,” எனச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.


மக்களின் அச்சமும், அரசின் மீதான எதிர்பார்ப்பும்


கீழ பட்டமங்கலம் ஊராட்சிப் பகுதியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏராளமான குடும்பங்கள், பழுதடைந்த மற்றும் ஓலைக் குடிசைகளில்தான் வசித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், டிட்வா புயலின் தாக்கத்தினால் மேலும் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுமோ என்ற அச்சத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


சராசரிக்கும் அதிகமாக வீசும் காற்று மற்றும் இடைவிடாத கனமழையின் காரணமாக, இந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வரதராஜன் குடும்பத்தினருக்குத் தேவையான உடனடி நிவாரண உதவிகளையும், காயமடைந்த காந்திமதிக்குச் சிறப்பான சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு மாவட்டநிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.