தலைப்பைப் படித்ததும் ”ஆ!” என ஒரு கணமாவது உங்கள் கண்கள் வியப்பால் விரியாமல் இருந்தால்தான், செய்தி.  ஆமாம், இதில் எந்தப் பொய்யும் இல்லை. உண்மையோ உண்மை! எத்தனை சத்தியம் வேண்டுமானாலும் செய்துகொடுக்கத் தயார் என்று சொல்கிறார்கள், சம்பந்தப்பட்ட மணமக்களே!.


முதலில் எனக்கும் எல்லாரையும் போலவே, இப்படியொரு திகைப்பும் வியப்பும் ஏற்பட்டது. ஆனால், தகவலைச் சொன்ன நண்பர், இது உண்மையா பொய்யா எனத் தெரியவில்லை என திருமண அழைப்பிதழையும் காட்டினார். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், துணைச்செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் நேரில் வாழ்த்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக, மணமகனின் தந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச்செயலாளர் ஏ.மோகன் என இருக்கவும், இதற்கு மேல் இதை நம்பலாம் என்கிற எண்ணம் வந்தது. ஆனாலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பெயரைக் கொண்ட மணமகளும், வங்கத்துக்கு மம்தாவுக்கு அரசியலில் எதிர்நிலையில் உள்ள பொதுவுடைமைக் கொள்கையை ஒட்டிய சமதர்மக் கொள்கையையே பெயரை வைத்த மணமகனும், வாழ்க்கைப்பாதையில் ஒன்றாகக் கைகோர்த்ததைப் பற்றி பின்னணியைப் பற்றி அறியும் ஆவல் ஒரு பக்கம்.. மணமகனின் பெயர்தான் சோசலிசம் என்றால், அவரின் அண்ணன்கள் மூத்தவர் கம்யூனிசம், இளையவர் லெனினிசம். 


எப்படி இந்தப் பெயர்களோடு இந்தப் பிள்ளைகள் இதுவரை வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதே சுவையானதுதான். முதலில், மணமகனின் தந்தையும் இந்திய கம்யூனிஸ்ட் சேலம் மாவட்டச் செயலாளருமான ஏ.மோகனிடம் பேசினோம். 




முன்பின் அறிமுகம் இல்லாத நம்மிடமும், ’சொல்லுங்க தோழரே’ எனத் தொடங்கியவர், பெயர்சிறப்பு, சாதகம், பாதகம், பஞ்சாயத்து என வரிசையாகச் சொன்னார். 
” அம்மாவும் அப்பாவும் கட்சியில இருந்தாங்க.. நானு 1983-ல இருந்து கட்சியில இருக்கிறனுங்க.. அம்மாவுக்கு இப்போ 70 வயசு, அப்பாவுக்கு 77 ஆகுதுங்க.இப்பவும் ஒன்றியக் குழுவுல அம்மா இருக்கறாங்க. மூத்த பையனுக்கு 92-ல கம்யூனிசம்னு வச்சதுங்க.. அப்டியே மத்தவிய்ங்களுக்கும் லெனினிசம், சோசலிசம்னு கொள்கையக் குறிக்கிறாப்புடி பெர் வச்சிட்டோமுங்க. மூத்தவரை பள்ளிக்கூடத்துல சேத்தப் போனப்போ, என்னங்க இப்பிடி பேர் இருக்குதுனு பிரச்சினை செஞ்சாங்க. நாங்களும் விடாம நின்னமுங்க. பிறகு, அண்ணாரு ஒருத்தரு பெற்றோர் ஆசிரியர் கழகத்துல இருந்ததால அவரும் சொல்ல சேத்திகிட்டாங்க. பேரப் பத்தி ஆரு கேட்டாலும் வெளக்கமா சொல்றதுங்க. கம்யூனிசத்துக்கு 3 வயசு இருக்கிறப்போ ஒரு நாள் ஒடம்பு சொகமில்லைனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க..சிதம்பரம்னு குழந்தைங்க டாக்டரு இந்தப் பெயரை சீட்டுல எழுதமாட்டேன்னு, என்னோட பேரை மோகன்னு எழுதி சேத்திருக்காருங்க.. மறுநா காலைல நான் போகவும் தகவல் தெரிஞ்சு, ‘என் புள்ளைக்கி நீங்க பேரு வைக்கவேணாம்.. அதே பேருல சேக்குறதுன்னா இருக்கட்டும்..இல்லைனா எழுதிக்குடுங்க.. வேற எடத்துல பாத்துக்கறேன்னு சொல்லி, பையன் வேற டாக்டருக்கிட்டக் கூட்டிட்டுப் போயிட்டனுங்க..”என்று விவரித்தவரிடம், மணமகனிடம் பேசமுடியுமா என்றோம். 


அருகில் இருந்த மணமகன் சோசலிசத்திடம் கைபேசியைத் தந்தார், பனைமரத்துப்பட்டி ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கும் ஏ. மோகன்.  தந்தையைவிட கூடுதல் உற்சாகத்துடன் பேசினார், கல்யாண மாப்பிள்ளை. பல சடங்குகளும் இருக்கும் இவர்கள் சார்ந்த சாதியச் சமூகத்தின் திருமணச் சடங்குகளை விலக்கிவிட்டு, அதேநேரம் தலைவர்கள் எடுத்துக்கொடுக்க தாலிகட்டும் திருமணம்! வரும் 13ஆம் தேதி சேலம் மாவட்டம், அமானி கொண்டாலப்பட்டி, காட்டூர் எனும் இவர்களின் ஊரில் இந்த இணையருக்கு மணவிழா நடைபெற இருக்கிறது. 


“எங்க குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சிக் குடும்பம்.அவங்க குடும்பத்துல தாத்தா காங்கிரஸ் கட்சிக்காரர்.. காங்கிரஸ்ல மம்தா பேனர்ஜி துணிச்சலா போராடிகிட்டு இருந்தப்போ, அவிய்ங்க பேர இவங்களுக்கு வச்சிட்டாங்க.. பாட்டிக்கு சொந்தக்காரப் பொண்ணுதானுங்க இவங்க.11ஆம் வகுப்புலேர்ந்தே பிடிச்சுப்போச்சுங்க..மூணு வருசம் காதலுங்க.. அப்பாகிட்டச் சொல்லி இப்போ கல்யாணமுங்க..” என வெட்கப்புன்னகையோடு சொன்னார், சோசலிசம். 
இருவரிடமும் கேட்ட பொதுவான கேள்வி: ‘இந்தப் பெயரை வைத்துக்கொண்டதால் நீங்கள் எதிர்கொண்ட அனுபவம் எப்படி இருந்தது?’


முதலில் பேசிய மணமகன், “ சின்ன வயசுல பள்ளிக்கோடத்துல கூடப் படிக்கிறவங்க கேலி பண்ணாம இல்லீங்க. ஆனா நல்லதோ கெட்டதோ எது செஞ்சாலும் கரெக்டா அண்ணன் தம்பி மூணு பேரையும் எங்க வகுப்புல வந்து கண்டிபிடிச்சுருவாங்க.ஏழாவது எட்டாவது படிக்கம்போது பேரு பத்தி கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதுங்க. என் பேருக்கு இப்படிதான் அர்த்தம் இருக்குது.உங்க பேருக்கு என்ன அர்த்தம்னு திருப்பிக் கேக்க ஆரம்பிச்சனுங்க. அப்படி கேட்டதுக்குப் பெறகா கேலியெல்லாம் கொறைஞ்சதுங்க.கல்லூரிக்குப் போனப்போ பேருனால பெருமையாத்தாங்க இருந்தது.அல்லாரும் நம்பள தனியான பார்வை பாப்பாங்க.ஆரம்பத்துல கொஞ்சம் சங்கட்டமா இருந்துச்சுங்க.. பெறகு அதுவே கெத்தா மாறிப்போச்சுங்க.இன்னைக்கும் சுயதொழில் பாத்துகிட்டு கட்சியிலயும் சமுதாயத்துக்காக என்னால முடிஞ்ச வேலையச் செய்யிறணுங்க.” என கொள்கைசார்ந்த பெயரின் மகிழ்ச்சியை அதிகமாகவே வெளிப்படுத்தினார். 


தொண்ணூறுகளின் குழந்தையான அவர் இப்படி என்றால், 21ம் நுற்றாண்டின் குழந்தையான மணமகளுக்கு கல்லூரி மாணவி தோரணை, குரலில்!”மொதல்லயெல்லாம் இந்தப் பேர ஏன் வச்சாங்கனு பிடிக்காம இருந்தது.எல்லாரும் என்னைய பார்ப்பாங்க. 10-வது படிக்கறப்பதான் பேருக்கான அர்த்தம் தெரிஞ்சது. இவங்களும் சொன்னாங்க,சாதிச்ச பெருமையா இருந்துச்சு..” என்ற மம்தா பேனர்ஜி, தன் தாயார்தான் இந்தப் பெயரைச் சூட்டியதாகச் சொன்னார்.  


அரசியலில் மம்தா பேனர்ஜியும் சோசலிசமும் இருப்பதற்கு நேர்மாறாக இந்தத் தம்பதியர் அன்புடனும் அறனுடனும் சிறப்பாக வாழ வாழ்த்துவோமே!

Also Read: இலங்கையுடனான உறவைத் துண்டிக்கவேண்டும் - சீமான்