மகர சங்கராந்தி இந்தியா முழுவதுமே கொண்டாடப்படுகிறது. சூரியனின் மகர ராசி பிரவேசத்தை தான் மகர சங்கராந்தியாக நாம் கொண்டாடுகிறோம்.


நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது. சூரியனை வழிபட்டு, நமக்கு உணவை அளித்திடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளையும் வழிபட்டு, நம் நன்றிக் கடன்களைச் செலுத்துவதும் இந்த மாதத்தில்தான்.


இப்படி, பல சிறப்புகளை தன்னுள்கொண்டு நமக்கு வழிகாட்டி வரும் தை மாதத்தை வரவேற்று, வழிபட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவோம்.


தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.


ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். 


மகர சங்கராந்தி 2023 சுப வேளை எது?


மகர சங்கராந்தி 2023 ஐ கொண்டாட ஜனவரி 15 காலை 7.15 மணி முதல் மாலை 5.46 மணி வரை நல்ல நேரம். மகா புண்ணிய காலம் என்பது காலை 7.15 மணி முதல் 9.00 மணி வரை.


மகர சங்கராந்தி புனித நீராடும் நேரம்?
 
மகா புண்ணிய காலமான காலை 7.15 மணி முதல் 9.00 மணி வரை புனித நீராடலாம்.


மகர சங்கராந்தி யோக நேரம் எது?


ஜனவரி 14 ஆம் தேதி மதியம் 12.24க்குப் பின்னர் மகர சங்கராந்தியின் புனித நேரமாகக் கருதப்படுகிறது. இது ஜனவரி 15 காலை 11.51 மணி வரை நீட்டிக்கும்.


இந்த ஆண்டு மகர சங்கராந்தி வாகனம் எது?


இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் வாகனமாக புலி அமைந்துள்ளது. உப வாகனமாக குதிரை உள்ளது. மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.