தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதவரை, பணியில் சேர்க்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கில் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், வழக்கு என்ன?, எதற்காக நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது என்பது குறித்து பார்ப்போம்.
தமிழ் தெரியாததால் பணி நீக்கம்:
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் , கடந்த 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்கிறார். இவர் தமிழ் மொழியில் பயிலாத காரணத்தால், அரசு விதிமுறைகளின்படி தமிழ் மொழியில் தனித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், ஜெயக்குமார் தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக, இவரை பணி நீக்கம் செய்து மின்வாரியத் துறை உத்தரவு பிறப்பிக்கிறது. இதையடுத்து, இந்த பணி நீக்கம்ம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ஜெயக்குமார், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
தனி நீதிபதி உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுவாமிநாதன், மனுதாரர் தமிழர் என்பதால் , பணி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து , மின்வாரியத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது, இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபகள் கொண்ட அமர்வானது, இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, மின்வாரியத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது” அரசு விதிமுறைகளின்படி தமிழ் மொழி தெரியாத காரணத்தால், ஜெயக்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மொழி கட்டாயம்:
இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது” ஜெயக்குமார் தமிழர் என்கிறார், ஆனால் தமிழ் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் , எப்படி பணி நீட்டிப்பு வழங்க முடியும். அரசு உத்தரவின்படி, தமிழ்நாட்டின் அரசு பணியில் இருப்பவர்கள் , தமிழ் மொழி எழுத - படிக்க தெரிந்திருக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்துவிட்டு , அரசு வேலை வாங்கிவிடுவதை, எவ்வாறு ஏற்றுக் கொள்வது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால், ஏன் அரசு வேலை கேட்டு வருகிறீர்கள் என்றும் கருத்துகளை தெரிவித்தார்.
இதையடுத்து, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்மனுதாரர் தரப்பில் விசாரணைக்காக வழக்கை ஒத்திவைத்ததனர் நீதிபதிகள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் மொழியை எழுத-படிக்க தெரியாத காரணத்தாலும், தமிழ் தேர்வு எழுதி வெற்றி பெறாத காரணத்தாலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெயக்குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் மொழி கட்டாயம் என நீதிபதிகள் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.