நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் நடித்த படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததாக தொடரப்பட்ட வழக்கில், சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
படத்தயாரிப்பில் ஈடுபட்ட சிவாஜியின் பேரன் துஷ்யந்த்
சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமாக துஷ்யந்த், அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து, ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாக, ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர். அந்த கடனை வருடத்திற்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கு - ஜப்திக்கு உத்தரவிட்ட நீதிபதி
இந்த கடனை, ஒப்புக்கொண்டபடி ஈசன் பட நிறுவனம் திருப்பி செலுத்தாததால், வழக்கு தொடரப்பட்டு, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் விசாரித்ததில், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால், அதனை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்திற்கு எழுதிக் கொடுக்கும்படி, கடந்த 2024 மே மாதம் உத்தரவிட்டார்.
படத்தை விற்று, கடன் தொகையை எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை ஈசன் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படியும், தனபாக்கியம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், படம் முழுமையடையவில்லை எனக் கூறி, தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், துஷ்யந்த்தின் தந்தை ராம்குமாரின் வசிக்கும் அவரது தந்தை சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தற்போது வரை நிலுவையில் உள்ள கடன் தொகை 3 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் எனவும் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. ஈசன் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட அவகாசத்தையும் நிராகரித்தார் நீதிபதி. மேலும், இந்த உத்தரவு குறித்து சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.