தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


போலி ஆவணங்கள் தயாரித்தது மட்டுமல்லாது அது வெளிச்சத்துக்கு வந்த போது தவற்றை மறைக்க தேர்வுத்தாள் தயார் செய்த இரண்டு கல்வியாளர்கள் மீது பழிசுமத்த முயன்றது ஆகிய குற்றங்களுக்காக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


வழக்கின் பின்னணி:


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமானது (TNUSRB) கடந்த 2018 ஆம் ஆண்டில் கை விரல்ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தியது. இந்த எழுத்துத்தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் கோரி அருணாச்சலம் என்ற இரண்டாம் நிலை காவலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 


அந்த கேள்விக்கான சரியான விடையை தேர்வு செய்து ஐஐடி பேராசிரியர் என்ற முறையில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையின்படி அருணாச்சலத்தின் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.


ஆனால், மனுதாரர் தரப்பில் ஒரு புகார் முன்வைக்கப்பட்டது. அதாவது, மூர்த்தி என்ற பெயரில் சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் யாருமே இல்லை எனபுகார் தெரிவிக்கப்பட்டது. 


அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் மூர்த்தி என்ற பெயரில் போலி அறிக்கை தாக்கல் செய்ததாக தமி்ழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரி செந்தாமரைக்கண்ணன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்துவந்தது.  இந்த வழக்கில் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தரப்பில் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் பி.குமரேசனும், செந்தாமரைக்கண்ணன் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும், மதிப்பெண் கோரிய மனுதாரர் அருணாச்சலத்துக்காக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் ஆஜராகி வாதிட்டனர். 


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


ரூ.10 லட்சம் அபராதம்:


இந்த வழக்கில் முழுக்க, முழுக்க சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தான் தவறு செய்துள்ளது. இந்த வழக்கில், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு ஆலோசகராக செயல்பட்ட விஜயகுமார் என்ற முதியவரையும் பள்ளி ஆசிரியரான மூர்த்தியையும் போலீஸார் மிரட்டி அச்சுறுத்தி பலிகடாவாக்கியுள்ளனர்.


போலீஸாரின் தொந்தரவால், முதியவரான விஜயகுமார் 22 நாட்களாக சிறை வாசம் அனுபவித்துள்ளார். எனவே மூர்த்தி, விஜயகுமார் ஆகியோர் மீதான கிரிமினல் வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. 


போலி ஆவணங்களை தயாரித்து போலீஸார் செய்த தவறுக்காக விஜயகுமாருக்கு ரூ. 10 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக 3 மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். அதேபோல இந்த வழக்கில்  குற்றம் புரிந்த தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், அபராதமாக ரூ. 2 ஆயிரத்தை 4 வார காலத்துக்குள் உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.


சீருடைப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரியான செந்தாமரைக் கண்ணன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.