இந்தியாவிற்கு தேவையான உப்பில் பெரும்பகுதி உப்பு நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தையும், தமிழகம் 2-வது இடத்தையும் பெற்று திகழ்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை காட்டிலும் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளத்தூர், அய்யனார்புரம், வேப்பலோடை, தருவைக்குளம், கீழஅரசரடி, தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தொழிலில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டுள்ளனர். உப்பளத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகாலை 5மணி முதல் பகல் 12மணி வரை பணிபுரிகின்றனர்.



தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற உப்புத்தொழில் தற்போது சுருங்கி 23 ஆயிரம் ஏக்கர் பரப்பாக குறைந்துவிட்டது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தூத்துக்குடி முதல் பொட்டல்காடு வரைபரந்து விரிந்து இருந்த உப்பளங்கள் தற்போது துறைமுகம் சார்ந்த நிறுவனங்கள், சரக்கு பெட்டக முனையம், மரத்தடி தளங்கள், கிட்டங்கிகளாக மாறிவிட்டது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இலங்கைக்கு மட்டுமே உப்பு ஏற்றுமதி ஆண்டிற்கு ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவம் தப்பி பெய்த மழையினால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய இயலாத நிலை உள்ளது.

 

 இந்தியாவில் மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாளடைவில் குஜராத் மாநிலத்தில் இருந்து விலைகுறைவான அளவில் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்ட தன் விளைவாக தற்போது தூத்துக்குடியில் இருந்து தென்மாநிலங்களுக்கு மட்டும் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததும் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்களே மாநிலத்தின் தேவைக்காக குஜராத் உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

 

மேலும் உப்புத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறைந்ததன் காரணமாகவும் உப்பளங்கள் குறையும் நிலையுள்ளதாக கூறும் உப்பு உற்பத்தியாளர்கள்,  இத்தொழிலை மத்திய மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர்.