தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது, அவர் கூறியதாவது,  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் தமழிகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதில்லை. எனவே, பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.



தமிழகம், கேரளா, மகாராஷ்ட்ரா உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  கடந்தாண்டு பாதிப்பு அதிகமாக இருந்த இடங்களில் நடப்பாண்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. சென்னையில் கடந்தாண்டு கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த இடங்களில் தற்போது அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  
அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  
இவ்வாறு அவர் கூறினார்.