சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பட்டதாரி இளம்பெண் பிரியங்கா டெக்னாலஜியை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வேன் என தெரிவித்துள்ளார் .





தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்ற தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து  அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தேர்தலில் போட்டியிட உள்ள இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தீவிரம் காட்டினர்.  தேர்தல் என்றாலே ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் என வேட்பாளர்கள் தங்கள் சின்னத்தையும், வாக்குறுதியை வெளிப்படுத்தும் விதமாக அச்சில் காட்சிப்படுத்தி விளம்பர படுத்தி வருவது வழக்கம்.


ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வேட்பாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்த துண்டுப்பிரசுரங்களை மட்டுமே பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிலர் இணையும் மூலமும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பட்டதாரி இளம்பெண் பிரியங்கா டெக்னாலஜியை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வேன் என தெரிவித்துள்ளார்.




சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் 22 வயதே ஆன எம்.பி.ஏ மாணவி பிரியங்கா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தது புதுவித அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் அரசியலுக்கு வர முன்வரவேண்டும். நான் வெற்றி பெற்ற பின் என்னுடைய வார்டுபகுதி மக்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் கூட தன்னை தொடர்புகொண்டு குறைகளை தெரிவித்தால் உடனடியாக அதை நிவர்த்தி செய்து தருவேன்” என தெரிவித்துள்ளார்.