செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வந்தது . இதனையடுத்து வண்டலூர் பூங்கா கடந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி மூடப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மீண்டும் வண்டலூர் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது. உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.  அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டபிறகே அனுமதிக்கப்பட்டனர். மனிதரிடம் இருந்து வைரஸ் தொற்று விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்ட பிறகே பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.

 

தொடர் கண்காணிப்பில் இருந்த போது கடந்த மே மாதம் 26-ஆம் தேதி நீலா என்கிற ஒன்பது வயது சிங்கத்திற்கு உடம்பு சரி இல்லாமல் இருந்துள்ளது. நீலா என்ற சிங்கத்திற்கு தொடர் இருமல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தும் சிங்கத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்குமோ என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து சிங்கத்தின் மாதிரிகளை, போபாலில் உள்ள தேசிய வனவிலங்கு நோய்களுக்கான நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருந்தும் மீண்டும் ஒரு முறை  உறுதி செய்வதற்காக 11 சிங்கங்களின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது சிங்கங்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிங்கங்கள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பெண்சிங்கம் நீலா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

 

அதேபோல் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளின் நடவடிக்கைகள் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக பூங்கா மருத்துவர்கள் விலங்குகளின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது பூங்காவில் விலங்குகளில் இருப்பிட பகுதிகளில் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தற்போது அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மேலும் அவர்கள் அனைவரும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய விலங்குகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது