முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே கோடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்நிலையில் கனகராஜின் மற்றொரு சகோதரர் பழனிவேல் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனகராஜின் மனைவி கலைவாணி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரில் கடந்த 3 ம் தேதி கனகராஜ்க்கு சொந்தமான நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்தாகவும், கலைவாணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தான் தனபால் கைது செய்யப்பட்டதாகவும் கூறி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும், சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாகவும் தெரிவித்து இருந்தார். இதன் பேரில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்துதல், பெண்களை தாக்குதல், மிரட்டுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பழனிவேல் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண