கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம்,சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  உயர்மட்ட மேம்பாலம்  அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது


 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam bus terminus 


தென் மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு  கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு,  மாற்றாக கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்த பொழுது,பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தன. சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன.




தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள்  பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள்,  விடுமுறை நாட்கள்,  சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில்  பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


ஆகாய நடைபாதை 


கிளாம்பாக்கம்  ரயில் நிலையம் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வண்டலூர் -  கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில்  20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆகாய நடைமேடை பயன்பாட்டிற்கு வரும் பொழுது, ரயில் நிலையத்திலிருந்து  பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்தை வந்த அடைய முடியும்.


 


கிளாம்பாக்கம்  உயர்மட்ட மேம்பாலம் - kilambakkam flyover


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததால்,  அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கி உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதி அடைய தொடங்கியுள்ளனர்.   எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையும் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம்  சென்னை-  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (   ஜிஎஸ்டி சாலையில் )  உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.




தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் வண்டலூர்  முதல் காட்டாங்குளத்தூர் வரை முதற்கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது. கிளாம்பாக்கம் மற்றும் சென்னை  உள்பகுதிகளை இணைக்கும் மாநகர பேருந்துகள் சென்று வர இந்த உயர்மட்ட மேம்பாலம் வரப் பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டு துவங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 


நன்மைகள் என்னென்ன ? - kilambakkam flyover Project 



  • உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால்,    தற்பொழுது சென்னை மார்க்கமாக  செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று , திரும்பி சென்னை நோக்கி செல்கின்றன. இதனால் கால விரயம் மற்றும் இல்லாமல் போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.  மேம்பாலம் அமைந்தால்  பேருந்துகள் எளிதாக செல்லலாம்.

  • சென்னையை நோக்கி வரும் பேருந்துகள்  வண்டலூர் சென்று திரும்பாமல் நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்றடையலாம்.

  • கிளாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து  நெரிசல் குறையும்.  இதன் காரணமாக பிற வாகனங்களும் எளிதில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடக்க முடியும்.