நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனக்கு மீண்டும் முதுகு எலும்புப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமடைந்துவிடுவேன் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். 


 






நடிகை குஷ்பு தேசிய மகளிர் அணைய உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பின்னர் வீடு திரும்பினார்.  அப்போது அவர், ”மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிவிட்டேன். இருப்பினும், நன்றாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய அன்பை பெற்றதில் மகிழ்கிறேன். நன்றி.” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.


குஷ்பு முழுமையாக குணமடைந்து விட்டார் என நினைத்த அவரது ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கும் தற்போது குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இதைகண்ட அவரது ரசிகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள், குஷ்பு விரைவில் குணமடைய வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 53 வயதான குஷ்பு தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதோடு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் அவர் நியமிக்கப்பட்டார்.  இதனிடையே, தனது AVNI சினிமாக்ஸ் பேனரின் கீழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகிறார்.


திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு,  கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, வம்சி  பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான, வாரிசு திரைப்படத்திலும் குஷ்பு நடித்து இருந்தார். ஆனால், படம் வெளியாகும்போது அவரது காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தன.