கரூர் மாவட்ட எல்லையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 30 ஆண்டுகாலமாக பயனற்று இருந்த கிணற்றை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தூர்வாரினர். கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்து சென்றதை


 


மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்துச் சென்ற கிராம மக்கள் - ஊர் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


 


 




 


கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  கிராமத்தின் மையப் பகுதியில் சுமார் 60 ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.


 




 


கடந்த 30 ஆண்டு காலமாக  கிணறு பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. குடிப்பதற்கு பஞ்சாயத்து குடிநீர் சரியாக வராததாலும், போர் பைப்பில் உப்பு தண்ணீர் வருவதால் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஊர் பொதுமக்களுடன் இணைந்து கிணறை தூர்வார முடிவெடுத்தனர்.


தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவெடுத்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 65 அடி ஆழமுள்ள கிணற்றில் 12 அடி தூர்வாரி கிணற்றுக்கு கம்பிகள் அமைத்து கயிறு உதவியுடன் வாளி மூலம் குடிநீர் எடுப்பதற்கான அமைப்பை செய்துள்ளனர். இதனை திருவிழாவாக கொண்டாடும் வகையில் கிணறு அருகே அமைந்துள்ள காளியம்மன் மற்றும் விநாயகர் கோவிலை சுத்தம் செய்து, பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


 




குறிப்பாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் உதவி இன்றி, இளைஞர்கள் ஒன்று கூடி 15,000 லிட்டர் தண்ணீர் இருக்கும் வகையில் கிணற்றை தூர்வாரி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புன்னகையுடன் கிணற்றில் தண்ணீர் எடுத்தனர். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உற்சாகத்துடன் தண்ணீரை பருகினர்.


 




இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதி மிகவும் வறட்சியான பகுதி தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதி, போர் பைப்பில் சரிவரத் தண்ணீர் வராததாலும் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக உறை கிணறு பயனற்று இருந்ததை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தலாம் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவெடுத்து கிராம மக்களிடம் நிதி வசூல் செய்து 12 அடிக்கும் மேல் இருந்த மண்களை தூர்வாரி எடுத்து குடிநீர் பயன்பாட்டிற்காக கொண்டு வந்துள்ளோம். நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. ஊரின் வளர்ச்சியை முடிந்த அளவிற்கு இந்த கிணற்று தண்ணீர் தீர்க்கும் நம்பிக்கை உள்ளது.  அரசு தாமாக முன்வந்து கிராம பகுதியில் குடிநீர் தேவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.