கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு திடீர் சாமியார். மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கும் இவர் பக்தர்கள் வழங்கும் எதையும் ஏற்காமல் விபூதியை பிரசாதமாக வழங்குகிறார். கரூரிலிருந்து - மதுரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் பகுதியில் ஒரு திடீர் சாமியார் உருவாகி இருக்கிறார். 




மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் நிர்வாண கோலத்தில் உடல் முழுவதும் விபூதியை பூசி காட்சி தருகிறார். அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்திருக்கும் இவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இவரை காண்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.


தற்போது இந்த மலைக்கோவிலூர் சித்தரை காண்பதற்காக கரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது, இவரைப் பற்றிய தகவல் கேள்விப்பட்டு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தேங்காய், பழம் சாப்பாடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொடுக்கின்றனர். பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் எதையும் ஏற்க மறுத்து அவற்றை அங்கேயே தூக்கி எறிந்து விடுகிறார். ஆனால் தனது பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குகிறார். அப்பகுதி முழுவதும் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள், பழங்கள், சாப்பாடு உள்ளிட்டவை குவிந்து காணப்படுகின்றன.


 




 


பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருக்கும் இவர் இதுவரை யாரிடமும் பேசியது இல்லை என்று கூறப்படுகிறது. அருகிலுள்ள பொதுமக்களிடம் இவர் குறித்து கேட்டபோது, கரூரைச் சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், சுப்பிரமணி என்பது அவர் பெயர் எனவும், குடும்ப பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வந்ததாக தெரிவிக்கின்றனர்.


 




வெயில், மழை, காற்று என்று எந்த காலத்திலும் அதே இடத்தில் அவர் தங்கி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், இவரை காண வரும் பக்தர்கள் மலைக்கோவிலூர் சித்தரை வணங்கி விட்டு சென்ற பிறகு தங்களது வாழ்க்கையில் நல்லது நடப்பதாகவும், நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.


தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாக்கடை சித்தர், மூக்குப்பொடி, சித்தர் செவ்வாழை, சித்தர் உள்ளிட்ட பல்வேறு வகையான சித்தர்கள் தோன்றி பல்வேறு ஆன்மீக அருள் வாக்குகளை வழங்கி வந்த நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சித்தர் ஒருவர் நிர்வாணமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் பல்வேறு மாதங்களாக அப்பகுதியில் வசித்து வந்தாலும் தற்போது தான் அவர் வெளியே தெரிய தொடங்கியுள்ளார். இவரை காண கரூர் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டத்திலிருந்து பல்வேறு ஆன்மீக பக்தர்கள் இவரை வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் .