கரூரில் அதிக வேகத்தில் காற்று வீசியதால், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த இண்டர்நெட் டவர் கவிழ்ந்ததில் கீழே இருந்த மின்கம்பமும் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக பொதுமக்கள் செல்லாததால் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. அதன் மொட்டைமாடியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 100 அடி உயரம் கொண்ட இண்டர்நெட் டவர் அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் இன்று காலை முதலே அதிகளவிலான காற்று வேகத்துடன் வீசி வருகிறது. இந்த நிலையில் இண்டர்நெட் டவர் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் தலை குப்புற கவிழ்ந்தது. 3வது மாடியில் இருந்து சாய்ந்த அந்த டவர் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 




இதனால் சக்தி நகர், இந்திரா நகருக்குச் செல்லும் வழியில் போக்குவரத்தை அப்பகுதி பொதுமக்கள் நிறுத்தியதுடன் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மின்கம்பங்களை மாற்றி, மின் கம்பிகளை சரி செய்து மின்சாரம் வழங்கும் பணியினை மின்சார வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.




ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் இண்டர்நெட் டவர்கள்,  மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை பாதிப்பு உண்டாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகையால் அதிகாரிகள் மக்களிடம் பாதுகாப்பாக செல்லும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


மாடிகளில் இண்டர்நெட் டவர் வைத்திருப்பவர்கள் அதனை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிக வேகத்தில் காற்று வீசியதின் காரணமாக, கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டு இருந்த தனியாருக்கு சொந்தமான இண்டர்நெட் டவர் கவிழ்ந்து மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


செல்போன் டவர்களால் பல்வேறு குருவி வகைகள் அழியப்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில், தற்போது இண்டர்நெட் டவர் அலைவரிசையால் மேலும் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டு வருகின்றது. மனிதனின் தவிர்க்க முடியாத பொருளாக தற்போது அலைபேசி இருப்பதால் பல்வேறு இடங்களில் அலைபேசி டவர்களும், மேலும் இண்டர்நெட் டவர்களும் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் முடியாது இதனை விட்டு வெளியே வரவும் முடியாது என்பதே உலகம் அறிந்த உண்மை.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண