சர்வதேச முருங்கை கண்காட்சியின் மூலம் உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையமாக கரூர் உருவாக வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பேசினார். கரூரில் வரும் நாலு, ஐந்து, ஆறு ஆகிய தேதிகளில் சர்வதேச அளவில் ஆன முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது. அந்த கண்காட்சியை சிறப்புற நடை பெறுவதற்காக ஒரு முன்னோட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது, கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் தொழில், உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சிறப்பு பெற்று உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள முருங்கையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் வருகின்ற நவம்பர் மாதம் 4, 5, 6 தேதிகளில் சர்வதேச முருங்கை கண்காட்சி நடைபெற உள்ளது.


 




 


 


அந்தக் கண்காட்சியின் மூலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரூ.80 கோடி அளவிலான முருங்கை வியாபாரத்தை 120 கோடி அளவிற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டு, இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளையும் ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்காக தான் இந்த முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், கரூர் மாவட்டத்தில் 2030 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் தொழில்கள் சார்பாக 25 ஆயிரம் கோடியும், தொழில் சார்ந்த விவசாயத்தில் மட்டும் 25 ஆயிரம் கோடியும், ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை முருங்கையை மேம்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக முருங்கையிலிருந்து புதிய தொழில்நுட்பம் மூலம், எவ்வாறு எத்தனை மதிப்பு கூட்டப் பொருட்கள் உருவாக்க முடியும் என்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.


 





 


தமிழக முதல்வர் கரூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளது. இது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். முருங்கைக்காய் ஒரு மிகப்பெரிய பச்சை தங்கம் ஆகும். இதை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி அவர்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முருங்கை பயிரிடும் முறையை நவீனப்படுத்தி பயிரிடும் நிலத்தின் அளவையும் அதிகப்படுத்த வேண்டும். அதோடு முருங்கையை இயற்கை முறையிலும், தயார் செய்வதற்கு முன் வர வேண்டும். மேலும், முருங்கையை காயாக ஏற்றுமதி செய்யாமல், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும். அதற்காக தொழில் முனைவோர்களை தயார் படுத்தி அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.


மேலும், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயம் இல்லாமல் தரிசாக உள்ள நிலங்களை விளைநிலமாக மாற்றுவதற்கு 8 முதல் 30 விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 ஏக்கர்களை இணைத்து அந்த நிலங்களில் விவசாயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 1300 ஏக்கர் அளவுக்கு விவசாயம் இல்லாத பூமிகள், விவசாயம் நடைபெற உள்ளது. 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது இந்த தொழில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சர்வதேச கண்காட்சியை பெரும் திருவிழாவாக மாற்றி உலகத்திற்கு முருங்கை வழங்கும் மையமாக கரூர் மாவட்டம் உருவாக வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.


மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணியீஸ்வரி, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் செந்தில் சேகர், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், வேளாண் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்  கலந்து கொண்டனர்.