வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.


மிக கனமழை வாய்ப்பு :


தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகt இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :


இந்த நிலையில், மழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில்  கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றும், நாளையும் :


தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது