கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்கள் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக, அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


 


 




 


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக அதிமுக வேட்பாளர் தங்கவேல் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி ஆகியோருடன் சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


 


 




 


இதேபோல், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான நபர்களுடன் ஊர்வலமாக சென்று முன்னாள் எம்.பி நாட்ராயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில், மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


 


 




 


இந்த நிகழ்ச்சிகளில் அனுமதி இன்றி ஆயிரக்கணக்கான நபர்களை கூட்டம் கூட்டி, கொடி பிடித்துக் கொண்டு பேரணியாக சென்று, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது கரூர் நகர காவல் துறையும், பாஜக வேட்பாளர் மீது தாந்தோணிமலை காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.