கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது.


திருக்கார்த்திகை தீபம்:


உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். அனைத்து சிவன் ஆலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும். மக்கள் வீடுகளிலும் இனிப்புகள் வைத்து பூஜை செய்து, வீடுகள் முழுவதும் தீபம் ஏற்றி, வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீச கடவுளை வழிபடுவர்.




அண்ணாமலையார் கோயில் கொடியேற்றத்தின்போது


கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபம்:


நடப்பு ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, காவல் தெய்வங்களான துர்க்கையம்மன் மற்றும்   பிடாரி அம்மனுக்கு கடந்த சில தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைப்பெற்றது. பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க, பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா பக்தி முழுகத்துடன் விருச்சக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த கொடியேற்றத்தை காண திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர்.


நிகழ்ச்சி நிரல்:


தொடர்ந்து, இன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலா நடைபெறுகிறது. இதையடுத்து தினந்தோறும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலாவும் நடைபெறும். விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ம் தேதி  விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய  பஞ்சமூர்த்திகளின் தேரோட்டமம் மாடவீதியில் நடைபெற உள்ளது.


விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் 6ம் தேதி கோயிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


விழா ஏற்பாடு:


கொடியேற்றத்தையொட்டி  1000த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.