கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை கடந்த இரண்டு  மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு மாதங்களாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு, மேலும் கடந்த இரண்டு வாரங்களாக கட்டுப்பாடுகள் அற்ற முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.
 
 
ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனையின் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 983 , கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 47, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1782. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 8566 . செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை ஒருநாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இறப்பு சதவீதம் குறையாமல் இருப்பது நோய்த் தொற்றின் வீரியத்தைக் காட்டுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை திருப்போரூர் ,கேளம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
 
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குப் பிறகு 500க்கு குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 492, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 , கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1120, அதேபோல் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4221. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்தாலும் நகர்ப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையாமல் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
அரசாங்கம் சொல்லும் அனைத்து அறிவுரைகளையும் முறைப்படி சமூக பொறுப்புடன் பொதுமக்கள் பின்பற்றி வந்தால் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.