Kamal haasan: திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கிறதா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் சூசகமாக பதில் சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கமல்ஹாசன் பிறந்தநாள்:


உலக நாயகனும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அதில், ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி - மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு!” என குறிப்பிட்டுள்ளார். 


நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


”அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்"


பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”இது என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான ஒரு நல்ல நாள். இந்த வாயு ஜெல் என்ற இயந்திரம் இரண்டு வருடங்களாக ராஜ் கமல் நிறுவனத்தில் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இதை பயன்படுத்தலாம்.  முன் மாதிரியாக இதை செய்வதால் இதை பார்த்து பயன்படுத்தி அனைத்து மருத்துவமனையிலும் என்னை போன்றவர்கள் அரசுக்கு கை கோர்பார்கள். இது இந்தியாவில் ஐஐடியில் செய்து உள்ளனர். இதை முன் மாதிரியாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன். இது போன்ற பல இடங்களில் மற்றவர்கள் செய்ய வேண்டும்" என்றார்.


திமுகவுடன் கூட்டணியா?


பின்னர், அவரிடம் அமைச்சர்களோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது திமுக கூட்டணிக்கு அச்சரமா ? என கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்து பேசிய அவர், “இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. மனிதம் சார்ந்தவர்கள்.  நாங்கள் எல்லாம் மனிதர்கள். இங்கு இருபவர்களுக்கு தனிக் கட்சி இருக்கின்றது. அவர்களுக்கென விசுவாசம் உள்ளது. இங்கு எங்களை ஒன்று சேர்த்தது கட்சி அல்ல. எங்கள் நல்லெண்ணம் தான் ஒன்று சேர்த்தது.  ஆனால், மனிதநேயம் முக்கியம். மனிதநேயத்தை எப்போது எந்த கட்சியினரும் விட வேண்டிய அவசியம் இல்லை. இந்த மனித நேயத்துடன்  இது தொடரும்.இதில் அரசியல் இல்லை” என்றார் கமல்ஹாசன்.




மேலும் படிக்க


kamal haasan birthday: ”கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி"...கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து