Kallakurchi illicit liquor: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஜிப்மரில்  சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்வு. இதில் நான்கு பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஜிப்மரில் 4 பேர் கவலைக்கிடம் 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு புதன்கிழமை மாலை 19 பேர் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில்  தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷ் என்பவருக்கு பாதுகாவலராக (attender) செல்வம் (45) என்பவர் வந்துள்ளார். அவரும் அன்றைய தினம் மகேஷ் உடன் விஷ சாராயம் அருந்தியுள்ளார்.

 

ஆனால் அது குறித்து அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மகேஷ் உடன் மருத்துவமனைக்கு  வந்து போது மகேஷ்க்கு அளிக்கப்பட்ட  சிகிச்சைகளை பார்த்து பயந்து போனவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஒரமாக அமர்ந்துள்ளார் கடந்த 48 மணி நேரத்தில் விஷத்தன்மை தன் உடம்பில் அதிகமானதை  அடுத்து நேற்று காலை செல்வம் மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் அவர் கவலை கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இதனால் தற்போது அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் நான்கு பேர் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

அதிகரிக்கும் உயிரிழப்புகள்:


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளில் கிடுகிடுவென உயர்ந்த பலியானவர்களின் எண்ணிக்கை 40-ஐ கடந்தது. மூன்றவாது நாளான நேற்றைய நாளின் முடிவில் 52 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.


தீவிர சிகிச்சை:


இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்திய சிலருக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மெத்தனால் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் கையிருப்பில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தர். ஆனால், அதனை மக்கள் நல்வாழ்வு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்து, தவறான தகவல்களை ஈபிஎஸ் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரார மரணங்களை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.