சென்னையில் அமைந்துள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கல்லூரி மாணவிகள் நேற்று கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி வரும் ஏப்ரல் 6-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.