நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட  கேரளாவை சேர்ந்த ரஷித், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு  தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் இது போன்ற ஆள்மாறாட்டம் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் சிபிஐ-யை எதிர் மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பி இருந்தது. கடந்த விசாரணையின் போது, நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள்  மாறாட்டத்தை தடுக்க எந்த வகையான நவீன முறைகளை  கடைபிடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் இந்த மனு  நீதிபதி நிர்மல்குமார்  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், நீட் தேர்வு மையத்தில்  ஒவ்வொரு தேர்வரையும்  வீடியோ பதிவு செய்ய வேண்டும். தேர்வு மையத்தில் அறை  கண்காணிப்பாளர்,  தேர்வரின் புகைப்படமும், அனுமதி சீட்டில் உள்ள  புகைப்படமும் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.  கண் விழித்திரை பதிவு,  விண்ணப்பிக்கும் பொழுது கைரேகை பதிவு, தேர்வு மையத்தில் கைரேகை பதிவு  மற்றும் கவுன்சிலிங்கின் போது கைரேகை பதிவு செய்யும் முறையை 3 இடங்களில் கொண்டு வர வேண்டும். பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை மென் பொருளை பயன்படுத்தி நீட் தேர்வில்  முறைகேடு நடக்காமல்  தவிர்க்கலாம். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சோதனை முறைகளை எளிதாக்கி கண்காணிப்பு தீவிர படுத்தலாம் உள்ளிட்ட நவீன முறைகளை  நடைமுறை படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து நீதிபதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு என்பது மிக முக்கியமானது.  இதில் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம்   நடைபெறாமல் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக தடுக்க வேண்டும். இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் கண்காணிப்பது நமது கடமை.நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு நடைபெறாமல் இருக்க என்னென்ன நவீன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சிபிஐயும், சிபிசிஐடியும் பதில் தாக்கல் செய்ய உத்தரவு விட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதி ஒத்தி வைத்தனர்.