தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை, தொல்லியல் அலுவலர் ஆசைதம்பி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். தற்போது நடைபெற்ற அகழாய்வு பணியில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு என 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 



 

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமானத்தின் கீழே 3 அடி உயரத்தில் தானியங்கள் சேமிக்கும் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாரமங்கலம் பகுதியில் மிகவும் பழமையான செப்பு நாணயம் மற்றும் அலுமினிய நாணயம் என இரண்டு வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், கொற்கை ஆய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் கீழ் பகுதியில் சுமார் 3 அடி உயரம் கொண்ட உணவு தானியங்கள் சேமிக்கும் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 



இந்த கொள்கலன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெறும் தொல்லியல் ஆய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. கொற்கையில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வுப்பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


 

இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, தற்போது அகழாய்வுக்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். ஆதிச்சநல்லூரில் உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையில் கொற்கை உள்ளிட்ட பகுதியில் கடல் சார்ந்த ஆய்வு செய்ய 5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொற்கையில் உணவு தானியங்கள் சேகரிக்கும் கொள்கலன் கிடைத்துள்ளது.  வரும் நாட்களில், மேலும் பல அற்புத தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம், என்றார்.



 

கொற்கையில் நடந்து வரும் அகழாய்வில் செங்கல் கட்டுமானத்துக்கு கீழ் பகுதியில் உணவு தானியம் சேமிக்கும் கொள் கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.