கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் 15,14,857 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.52% அதிகமாகும். நாடு முழுவதும் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,91,58,120 வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.


இதனால் சாலைகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பிற பகுதிகளை விட தமிழகத்தில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. இருப்பினும் வாகனங்களின் மீதான மோகம், மக்களிடத்தில் குறையவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மாதந்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவத்தொடங்கியது.




தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வருவது தடுக்கப்பட்டது. அதேநேரம் பொதுமக்களுக்கு தேவையான உயர்தரமான சிகிச்சையும் அளிக்கபட்டு வருகிறது.


இந்நிலையில் ஊரடங்கின்போது புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் இயங்கவில்லை. பிறகு கொரோனா பரவல் மெல்ல, மெல்ல குறையத்தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை வழங்கியது. இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் மீண்டும் இயங்க தொடங்கின. இருப்பினும் விற்பனை குறைவாகவே இருந்தது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த மே, ஜூன் மாதங்களில் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகவில்லை என்றனர்.




அதனை தொடர்ந்து ஜூலை முதல் மீண்டும் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் விளைவாக கடந்த ஆண்டு 15,14,857 வாகனங்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.52 சதவீதம் அதிகமாகும். 2020 ஆம் ஆண்டில் 14,92,244 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அலையினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.


ஒருவேளை பாதிப்பு அதிகரித்து, முன்பைப்போல் ஊரடங்கு மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்படும் பட்சத்தில் வாகன விற்பனை சரிவடைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக புத்தாண்டு,க் பொங்கல் நேரங்களில் புதிதாக வாகனத்தை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் நடப்பு ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து வாகன விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த 16ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 75,296 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.