'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் (TN) பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 45 மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் படிப்பில் சேருவதற்கான ஆணைகளைப்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிலையில், ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் திட்டத்தின் அடுத்த பேட்ச், ஜனவரி 2023ல் தொடங்குவதால் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


'அனைவருக்கும் ஐஐடிஎம்'


தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற ஐஐடி மெட்ராஸ்-ன் உயரிய நோக்கை நடைமுறைப்படுத்தும் வகையில், பொதுக் கல்வித் திட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இம்முயற்சிகளில் ஒன்றாக 'அனைவருக்கும் ஐஐடிஎம்' (IIT Madras for All) திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. மனப்பாடம் இன்றி கற்றல் திறமையை வெளிக்கொணரச் செய்யும் வகையில் அவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ்-ல் 14 வாரங்கள் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டு, பிஎஸ் பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான தகுதித் தேர்வை எழுத 68 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 39 பெண்கள் உள்பட 87 மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் (Data Science and Applications) நான்காண்டுப் படிப்பில் சேர ஆணைகளைப் பெற்றுள்ளனர். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு இக்கல்வி நிறுவனத்தால் இந்தத் திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.


அமைச்சர் பாராட்டு:


“ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் பட்டப்படிப்புக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை நான் வாழ்த்துகிறேன், மேலும் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். தமிழக அரசு மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், குறைந்த விலையில் கல்வி கற்கவும், இதுபோன்ற அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொண்டதற்காக ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மற்றும் அதன் இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.




இன்று அனைவரவுக்கும் ஐஐடிஎம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை கடிதங்களை வழங்கும் போது "இது மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான முதன்மை கல்வி நிறுவனங்களில் கல்வியை அணுகுவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது, மேலும் இந்த முயற்சியை சாத்தியமாக்குவதில் IIT மெட்ராஸ் BS பட்டப்படிப்பு திட்டத்தின் ஒத்துழைப்பை நான் பாராட்டுகிறேன். நீங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் போது இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று அமைச்சர் கூறினார்.


குறைந்த செலவில் தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஐஐடி மெட்ராஸ், பிஎஸ் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை வருமான அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. மேலும், தகுதியுடைய மாணவர்கள் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (TAHDCO) கூட்டு முயற்சியுடன் தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியைப் பெற முடியும்.


கல்வி கற்கும் மாணவர்கள் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று பல்வேறு நிலைகளில் வெளியேற ஏதுவாக இந்தப் பாடத்திட்டம் கவனமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கல்வி கற்போர் என்ன சாதிக்க விரும்புகிறார்களோ அதற்கேற்ப முடிவுகளை தாங்களே எடுக்க ஏதுவாக இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு  மிகவும் அவசியமான தொழில்துறை தொடர்பான அறிவு மற்றும் திறன்களை இப்பாடத் திட்டம் வழங்குகிறது. மேலும், பிஎஸ் பட்டம் பெற்ற மாணவர்கள் GATE தேர்வு எழுதத் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எம்டெக் படிப்பைத் தொடரவோ அல்லது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவோ செய்யலாம்.


இப்பாடத் திட்டத்தில் சேர்ந்துள்ள 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் மிக அதிகம். அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


வணிக ரீதியாக வலிமையான முடிவுகளை மேற்கொள்ள உதவும் வகையில், தரவுகளை நிர்வகிக்கவும், வடிவங்களைக் காட்சிப்படுத்தவும், பயனுள்ள வணிக முடிவுகளை எடுக்கவும் தரவு அறிவியல் (Data Science) பாடத்திட்டம் உதவிகரமாக உள்ளது. விரிவான பயிற்சி, அனுபவக் கற்றல் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தொழில் ரீதியாக தரத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் பயிற்சி பெறுகின்றனர்.


உயர்தரமான கல்வி:


தரவுகளை அடிப்படையாகக் கொண்ட உலகில் திறனையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கக் கூடிய தளமாக இந்த பாடத்திட்டம் விளங்குகிறது. அனைத்தையும் உள்ளடக்கிய, குறைந்த செலவிலான இந்தக் கல்வி மாதிரியின் மூலம் கல்வி பயில்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உயர்தரமான கல்வியைப் பெற முடியும் என ஐஐடி குழுவினர் உறுதியாக உள்ளனர்”எனக் குறிப்பிட்டார் ஐஐடி மெட்ராஸ்-ன் பிஎஸ் திட்ட ஆசிரியர் மற்றும் பொறுப்பாளரான பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன்.


விண்ணப்பங்கள் வரவேற்பு:


ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் திட்டத்தின் அடுத்த பேட்ச் ஜனவரி 2023ல் தொடங்குவதால் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் தகவல்களை வலைதளத்தில் காணலாம். https://onlinedegree.iitm.ac.in/