மத்திய அரசு ரயில்வே துறையில் நவீனத்தையும், வேகத்தையும் இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலானது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில், இயக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இந்த வந்தே பாரத் ரயிலை, இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நான்கு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.



 

சென்னை -- மைசூர்

 

இயக்கப்பட்ட நான்கு ரயில்களுமே வட இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐந்தாவது தொடர்வண்டி ஆனது தென்னிந்தியாவில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. அதுவும் சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட உள்ளது. சென்னை - மைசூர் இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை  பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை முதல் பெங்களூர் மற்றும் மைசூரு இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். மொத்தம் 483 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

 

சோதனை ஓட்டம்

 

 

இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை- பெங்களூரு மற்றும் மைசூர் இடையான முன்னோட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மைசூருக்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலானது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக மைசூர் சென்று அடைகிறது.

 

 வந்தே பாரத் சர்ச்சை

 

வட மாநிலங்களில் ரயில்கள் இயக்கப்பட்ட பொழுது, கால்நடைகள் மோதி ரயிலின் முன்பாகம் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



 

அசர வைக்கும் வேகம் :

 

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகத்தில் செல்லக்கூடியது. பிற ரயில்களை காட்டிலும் இதில் நவீன வசதிகள் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், இணைய வசதிகள், மிகவும் சொகுசான இருக்கை வசதிகள், கழிவறை வசதிகள் ஆகிய உள்ளன. வந்தே பாரத் ரயிலானது ஒரு நிமிடத்திற்கு உள்ளேயே அதாவது 52 விநாடிகளிலே பூஜ்ஜியம் கிலோமீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். வந்தே பாரத் ரயிலானது டெல்லி  - வாரணாசி, நியூ டெல்லி – ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத், மும்பை சென்ட்ரல் – காந்திநகர் (குஜராத்) மற்றும் டெல்லி முதல் – அம்ப் அந்தாரா ( இமாச்சல பிரதேசம்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.



 

சென்னையில் இருந்து மைசூர் இடையிலான இந்த ரயில் மங்களூர் வழியாக இயக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், வருங்காலங்களில் டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – லக்னோ, கவுரா – ராஞ்சி, மும்பை – புனே, டெல்லி – போபால், பெங்களூர்  முதல் கன்னியாகுமரி, கவுரா – பூரி, எர்ணாகுளம் – பெங்களூர், புனே – பெங்களூர், செகந்திராபாத் – திருப்பதி – பெங்களூர், சென்னை – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சில ரயில்கள் சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட உள்ளது.