சென்னை ஐ.ஐ.டி.யும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் இணைந்து ’காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சியை அறிவித்துள்ளன. இதன்படி 3,000 சிறப்பு விருந்தினர்கள், காசி மற்றும் அயோத்தியை பார்க்க, தமிழகத்தில் இருந்து இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். 


தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இலடயில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொணர்வது இதன் நோக்கமாகும்.


இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:


’’தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் இணைந்து, காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளன.


தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக, கலாசார உறவுகளை வெளிக் கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை ’காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில் 12 வெவ்வேறு துறைகளில் இருந்து, குறிப்பாக கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை, காசிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.




சென்னை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து விருந்தினர்கள் அழைக்கப்படுவர். அவர்களுக்கு ரயில்களில் சிறப்பு பெட்டி அமைக்கப்பட்டு, காசிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் புறப்பட்டு திரும்பி வர, 8 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த பயணத்தில் கலந்துகொள்வோர் காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவர். கங்கையில் படகு சவாரியும் உண்டு. பயண செலவு, தங்குமிடம் முழுவதும் இலவசம் ஆகும். 


விருப்பம் உள்ளவர்கள் https://kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், உடனடியாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கூடுதல் விவரங்களை https://kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்’’.


இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.