கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக பிரமுகர்களின் வீடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இச்சூழலில் குண்டு வீச்சு நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைந்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேசியதாவது:


திண்டுக்கல் மாவட்டத்தில் பால்ராஜ் என்பவரது வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கந்தர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னதாக தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் டிஐஜி தலைமையில் இரவு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இது போன்ற செயலில் ஈடுபடுவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேகக் கூடிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது


தென் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு வழக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


தென் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் உரிமையாளர்களுக்கு சில்லறை முறையில் பெட்ரோல் பாட்டில்களில் வழங்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:


“நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


கைது செய்ய தனிப்படைகள்


அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன.


கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள். சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ணன், இகாப, அங்கு முகாமிட்டுள்ளார்.


இச்சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.