ஒசூர் அருகே தனியார் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியின் போது மேற்கூரை சரிந்து  2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர்.

 

கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் தாலுகாவில் பேடர்ஹல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானம் பணியை கர்நாடக மாநில ஹோசாகோட்டை பகுதியில் சேர்ந்த பிரதாப் பில்டர்ஸ் மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில், முதல்தளம் சிமெண்ட்  கான்கிரீட்  மோல்டிங் போடப்பட்டுள்ளது. இன்று  இரண்டாவது தளம் கான்கிரீட் மோல்டிங் போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் வட மாநிலத்தை  சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்

 

இரண்டாவது தளத்தில் இன்று கம்பி கட்டப்பட்டு  கான்கிரீட் மோல்டிங் போட்டுக் கொண்டிருந்தபோது அதிக பாரம் காரணமாக  எதிர்பாராத விதமாக கான்கிரீட் மோல்டிங்  சரிந்து விபத்து ஏற்பட்டது.

 

அப்போது அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி 16 பேர் படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



 

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் ஜேசிபி வாகனம் மூலம் மீட்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு  வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கவலைக்கிடமாக பெங்களுர் மருத்துவமனைக்கு சென்ற 5 பேரில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி  பரிதாமக  உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மின்னர் பிஸ்வாஸ்,  ஜாகித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

முதல் கட்ட விசாரணையில் சென்ட்ரிங் சரியாக அமைக்காதது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.