தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துருதிருஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள ஒரு நபர். எப்பட்இயும் உடல்நிலை தேறி அவர் மீண்டு வந்துவிடுவார் என நம்பினோம். ஆனால், அண்மையில் தேமுதிக பொதுக்குழுவில் பார்க்கும்போது எனது நம்பிக்கை சற்று சரிந்துவிட்டது. அவர் ஆரோக்கியாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து இருபார். தமிழ் மக்களுக்கு எண்ணற்ற நலன்களை செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


குவியும் தொண்டர்கள், ரசிகர்கள்:


உடல்நலக் குறைப்பாடு காரணமாக நேற்று காலை உயிரிழந்த விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது மறைவு செய்தியை அறிந்ததுமே விஜயகாந்தின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர், விஜயகாந்த் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக அங்கு குவிந்தனர். இதனால், கூட்ம் அங்கு கட்டுக்கடங்காமல் போனது. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என ஏராளமானோர் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.


தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்:


கோயம்பேடு சென்னை நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நடிகர் ரஜினி உள்ளிட்ட பல முக்கிய விவிஐபிக்கள் இன்று, விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாத செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து, விஜயகாந்தின் உடல் ஊர்வலாமாக கோயம்பேடு கொண்டு வரப்பட்டு, மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு மாற்றங்களையும் சென்னை பெருநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.