கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், வேலூர், நெல்லை, கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர். கனமழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று நவம்பர்.1 முதல் திறக்கப்பட உள்ளன. சுமார் 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பும் குழந்தைகளை இனிப்புகள் கொடுத்து வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்பிய 1 முதல் 8ஆம் வகுப்பு முதலான மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.



தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:


இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக நவ.1, 2 தேதிகளில் (இன்றும் நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.




நவ. 3, 4 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.


ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், நன்னிலம், புதுக்கோட்டை மாவட்டம்மணமேல்குடி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நவ.1-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் 3-ம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.